சனி, 21 டிசம்பர், 2013

பெரியவர்களை சுற்றத்தாராகக் கொள்வது பேறுகளுள் சிறந்தது


பொருட்பால்
அரசியல்
அதிகாரம்- பெரியாரைத் துணைகோடல்
குறள் 441 முதல் 445 வரை.


அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.       குறள் 441
அறம் உணர்ந்த மூத்த அறிவுடையவரின் நட்பை
பெறும் வகையை ஆராய்ந்தறிந்து பெறுக.   பாமரன் பொருள்.

உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.     குறள்  442
வந்த துன்பத்தைப் போக்கி அது திரும்பவராது முன்காக்கும்
தன்மையுடையவரைப் போற்றி துணையாகப் பெறுக.   பாமரன் பொருள்.

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.    குறள் # 443
அரியபேறுகளுள் எல்லாம் அருமையானது பெரியவர்களைப்
போற்றி சுற்றத்தாராக ஆக்கிக் கொள்வது.    பாமரன் பொருள்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.  குறள் # 444
தம்மைவிட அறிவில்சிறந்தவரை சுற்றத்தாராகும்படி நடத்தல்
வல்லமையுள் எல்லாம் முதன்மையானது..    பாமரன் பொருள்.

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.    குறள் # 445
உடனுள்ள அறிஞர்களைக் கண்ணாகக் கொண்டு நடத்தலால் தலைவன்
அறிஞர்களை துணையாகக் கொள்ள வேண்டும்   பாமரன் பொருள்.