ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

நல்லறிஞரின் அவைக்கு அஞ்சுபவர் கல்லாதவரைவிடக் கீழானவர்

                          பொருட்பால்    --
                         அமைச்சியல்  --
                               அவையஞ்சாமை
                   குறள் 721 முதல் 730 வரை
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.    குறள் # 721
அவையின் வகைதெரிந்து பேசும்போது பிழையாகப் பேசமாட்டார் சொல்லின்
வகையறிந்த தூய்மை யானவர்கள்.        பாமரன் பொருள்

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.    குறள் # 722
கற்றவர்களுள் கற்றவராக மதிக்கப்படுவர் கற்றவர்கள்முன்
தான் கற்றவற்றை மனதில்பதியுமாறு சொல்ல வல்லவர்..   பாமரன் பொருள்
                                         
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்     குறள் # 723
போர்க்களத்தில் சாகத்துணிவர் பலர், சிலரே
கற்றவர் அவையில் பேச பயப்படாதவர்.     பாமரன் பொருள்

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.      குறள் # 724
கற்றவர்முன் தாம்கற்றவற்றை மனதில்பதியுமாறு சொல்லி தாம்கற்றதைவிட
மிகுதியாகக் கற்றவரிடம் மேலும் பல கற்கவேண்டும்  பாமரன் பொருள் 

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு     குறள் # 725
கற்கும்வழியில் அளவைநூல் அறிந்து கற்கவேண்டும் அவையில் அஞ்சாது
மறுமொழி கொடுப்ப தற்காக.      பாமரன் பொருள்

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நூண்ணவை அஞ்சு பவர்க்கு     குறள் # 726
 வாளுக்கு என்ன சம்பந்தம் அஞ்சாதவீரர் அல்லாதவருக்கு, நூலோடு என்ன சம்பந்தம்
நுண்ணறிவுடையவரின் அவைக்கு பயப்படுவருக்கு.      பாமரன் பொருள்

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்     குறள் # 727    
போர்க்களத்திலுள்ள பேடியின் கையில் உள்ள கூரான வாள் போன்றது அவையில்
பேச அஞ்சுபவன் கற்ற நூல்.      பாமரன் பொருள்

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.       குறள் # 728
பலநூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே நல் அறிஞரின் அவையில்
கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல இயலாதவர்.  பாமரன் பொருள்

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.    குறள் # 729
கல்லாதவரைவிட கீழானவராகக் கருதப்படுவர் நூல்களைக் கற்றறிந்த போதிலும் நல்லறிஞரின் அவைக்கு அஞ்சுபவர்.    பாமரன் பொருள்


உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்     குறள். # 730
உயிரோடு இருந்தும் இறந்தவர்க்கு ஒப்பாவர் அவைக்களத்திற்கு அஞ்சி
கற்றவற்றை கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர். பாமரன் பொருள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.